நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை
முதல் மண்டலம் இசை
| வரி எண். | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
|---|---|---|---|
| 18. | ஆனந்தமுகில் | 10 | |
| பலன் | மனித குலம் செய்கின்ற பாவமும் அதில் இருந்து நீங்கும் வழியை தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
|
||
ஆனந்தமுகில்
அன்னங் கொடுத்தவர்கண் முன்னநோ கச்சொன்ன
வனியாய மோவுணவிலே
ஆலமிட் டுக்கொலை புரிந்தபவ மோபெரிய
வடிகளை மறந்தவகமோ
தன்னையே பெரிதென வறைந்தவதி பாவமோ
சவைகளில் வழக்கோரமாச்
சாற்றிய வனீதமோ பொய்ச்சத்தி யஞ்செய்த
தாழ்வோ வனேகவுயிரைத்
தின்றதுரி தங்களோ திவ்வியகுண தெய்வம்வாழ்
சினகர மழித்தசெடியோ
திரிகரண சுத்தமில் லாதுமா மந்த்ரஞ்
செபித்தபிச கோவந்தெனை
முன்னேற வொட்டாம லாணைபுரி கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே. 1
அண்டிவனவ ருக்கின்ன றந்ததவ றோதுன்பி
லாதரித் திட்டவர்களுக்
கல்லகண் டஞ்செய்த கொடுமையோ நின்னடிக
ளடிவணங் காதவகமோ
சண்டாளர் தொடர்பினை விரும்பிய பிறந்தையோ
சாலப்பொய் சொற்றபிசகோ
சத்திரஞ் சாலைக ளழித்தபா தகமோ
சலத்திற் புணர்ந்ததவறோ
பண்டாய மறைகளைப் பழிசொன்ன பாவமோ
பகலிற் புணர்ந்தபுகரோ
பதிவிரத மல்குமட மகளிரைக் காதலிற்
படரும்வினை யோவந்தெனை
முண்டாள னாக்கிமுறி யடிமைகொள் கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே.
2
சித்தநிலை மாறினோர் பொருள்கொண்ட குற்றமோ
தெய்வவிகழ் செய்தசெடியோ
சிசுவதை விருத்தியோ திருடிய கொழிப்போ
சிவாகம மிகழ்ந்ததீதோ
சத்தியச் சைவர்ப் பழித்தபிழை யோபரம
தன்மம்விற் றுன்டதவறோ
தான்சாக நஞ்சுண்ட தோடமோ சண்டாளர்
சாதிவினை செய்தகோதோ
குத்திரஞ் செய்வாரை மெச்சிய பிறந்தையோ
கூலிகள் குறைத்தகுறையோ
கோபத்தை யேசதா நேசித்த பாவமோ
குடிகேட னானபயனோ
முத்திநெறி கூடாம லெனைவளைக் கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே.
3
வேதியரை நிந்தித்த தவறோ விவேகரற
வேட்கையை மறுத்தமறமோ
மெய்யன்பர் புரிவிழும நோன்புகட் கிடையூறு
விளையவினை செய்தமிறையோ
சூதகப் பெண்களைத் தொட்டகுறை யோதெய்வ
தூடணங் கேட்டபிசகோ
சொன்னசொற் றவறாது நடவாத தோடமோ
சூதுவழி நின்றபலனோ
பாதகத் தொழின்மூல மாடகந் தேடியுள
பாவமோ பாவியின்கைப்
பலியுண்ட பழுதோ சதாகால மாயெனைப்
படர்துயர்க் கடலமிழ்த்தி
மூதறி வுதிக்காம லாணையிடு கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே. 4
படிகமுத வாலோபி யாகிவந் தோரகடு
பற்றவைத் துண்டபவமோ
படர்கொடி மரஞ்செடிகள் வட்கலுற வெட்டிப்
பலக்கே டிழைத்தபலனோ
மடிநழுவு மின்கண்மேன் மனம்வைத்த மறமோவுன்
மாணடி மறந்தவடுவோ
மகத்தாய நிற்குமற் றொருதேவை யிணைசொன்ன
வழுவோ பொருட்பெண்டுகள்
கடிதடங் காணியென வுள்ளிமனை வியைவிட்ட
கன்மமோ கருணையற்ற
கதைகளுக் கேசெவி கொடுத்தகறை யோவெனைக்
காமரோ டத்திருத்தி
முடிவில்கவ லைக்கலியின் மீதலைக் கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே.
5
கள்ளுண்டு தள்ளாடி நின்றமதி மோசமோ
கஞ்சாவு மபினும்வெறியுங்
கைகண்ட கற்பமென வுண்டமதி கேடோ
கணக்கில்வஞ் சித்தகசடோ
பள்ளர்க ளெனத்தினம் வதஞ்செய்து புன்பிசித
பக்ஷணம் பணியபவமோ
பக்ஷமது பாராட்டி வைத்தபிறர் சொத்தைமறு
படியில்லை யென்றபழுதோ
உள்ளொன்றும் வெளியொன்று மாய்க்குத்தி ரம்பேசி
யூதியம் விழைந்தகரிலோ
உன்னுடைய தளிகளி லசுத்தம் புரிந்தடிக
ளுரைமீறி நின்றபிழையோ
முள்ளுமுள் ளாயெனை வடிக்கின்ற தேபரம
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே.
6
பிரியலர்க் கிரிபாய பிழையோ பிதாவன்னை
பெண்டமர் மனக்கொதிப்போ
பெரியபொரு ளெனுமுன்னை யிலையென்ற கலுடமோ
பேயடிமை யானபுரையோ
பரதார விச்சையின் பலனோ துணைத்துரோக
பாவமோ குருசாபமோ
பத்திநெறி யாளர்ப் பிழைத்தபிழை யோநீதி
பல்கவகி லத்தையாளும்
அரசன்மனை குருவண்ணன் மாதுலன் றேவிகளை
யணையவுன் னியதீமையோ
அந்தணர்க் கிடுவதா யுறுதிமொழி செய்தவா
றளியா வரிப்போவெனை
முரணாய துன்பினுழை வித்தலைக் கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே. 7
நாவிதர்வண் ணார்கூலி நல்காத பீடையோ
நங்கையர்கள் கொங்கைகண்மேல்
நயனங்க ளைச்செல்ல விட்டபிழை யோவிரத
நாளிற் பிணைந்ததீதோ
பாவலர்கள் சாபமோ பரமவுன் கோபமோ
பத்தர்கண் மனத்தாபமோ
பாலுண்டு புள்ளுவஞ் செய்தபழி யோதிவ்விய
பதிபூசை விட்டகுறையோ
கோவதை புரிந்தமா கொடுமையோ கன்றுகள்
குடிக்கின்ற பால்கறந்த
குற்றமோ விதவையைத் தொட்டவழு வோநல்ல
கொள்கைநிமி ராமலென்னை
மூவிழும மானகெபி யுட்டள்ளு கின்றதே
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே. 8
புனிதர்நெஞ் சங்கலுழ வசைசொன்ன கலுடமொ
பொய்ந்நூ றெரித்தபுரையோ
புருடர்மண மங்கைகளை மித்திரபே தஞ்செய்த
புகரோ பணத்தவாவால்
அனியாய நெஞ்சமுற் றஃகஞ் சுருக்கிவிற்
றகவோகை கொண்டவகமோ
அரன்விண்டு முதலியோர் நிலயநீர் நிலைகளி
லசுத்தம திழைத்தமறமோ
சனிபோ லெனைத் தொட்ட டலைக்கின்ற தேநினது
தண்ணளியை யுள்கொணாமல்
தண்டமிழ்க் குறுமுனி பகீரத னிராகவன்
றண்டுமுனி வரன்வாசுகி
முனிவர்சுர ரெவ்வரு மிறைஞ்சுபது மச்சரண
முருகவந் தருள்செயாயோ
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே. 9
சுத்தமா நல்லறிவு தோன்றாத பாதகன்
றுதைபொய் யுளேனென்னினுஞ்
சொல்லுறுதி யில்லாத பொல்லாத வஞ்சகன்
சூதக விநாசனெனினும்
பத்திநெறி பழகாத பாமரன் கொடுமையே
பண்ணுமுழு மட்டியெனினும்
பழிபாவம் யாவுமொன் றாகக் குழீ இயவொர்
பருவுரு வுளேனென்னினும்
எத்தனை சழக்கிங னிழைத்திருந் தானுநா
னின்னுமறி யாதுசெயினும்
எப்படியு மாதரித் திமிழரு ளிகைத்துநீ
யெனையாள லுன்பரங்காண்
முத்திமுத லேபுகழ் படித்தகோ னாடுமறை
முடிவான கர்த்தவியமே
முத்தரொடு சித்தரும் பருகுமமிர் தம்பொழிய
மூடுமா னந்தமுகிலே. 10

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024)