பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » முதல் மண்டலம் இசை

முதல் மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
47. நெஞ்சுப்பத்து 10
பலன்நமக்கு ஏக தெய்வ வழிபாட்டின் பெருமையை உணர வேண்டுமா?
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

நெஞ்சுப்பத்து

கலிவிருத்தம்

சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிகாட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

பூமணம் இறைச்சி மது பொங்கலொடு போதை
நேமம் உடனே இழி தெய்வங்கள் எதிர் நீட்டிச்
சேமம் உறல் உண்டு எனில் நல் உம்பர் பணி தேவை
நீ முனி நயம்பெற ஒர் ஐயம் எனை நெஞ்சே.              1

1.நெஞ்சே! மலர்கள், மணப்பொருள், மாமிசம், மது, பொங்கல், மயக்கம் தரும் பொருள் ஆகியவற்றை நியமத்துடன் கீழான தெய்வங்களின் முன்னே படைத்து நன்மை பெறுதல் உண்டு என்றால், நல்ல தேவர்கள் வணங்கும் பெரிய கடவுளான கந்தவேளை நீ நினைத்து, நன்மை பெறுவதற்கு ஓர் ஐயம் என்ன? இல்லையன்றோ?

என் அடியவர்க்கு உலகில் ஏது துயர் என்று
சொன்ன குமரேசனது சொல் நிஜம் மறந்து இங்கு
உன்னிடு கலக்கம் மிக உற்று உலைவது என்னை
அன்னவன் அடிக்கு அடிமை ஆக அமர் நெஞ்சே.                 2

2. நெஞ்சே! இவ்வுலகில் என் அடியார்க்கு ஏது துன்பம் என்று சொன்ன குமரேசனுடைய சொல்லின் உண்மையை மறந்து, இவ்வுலகில் நினைத்திடும் கலக்கம் மிகுதியும் கொண்டு அலைவதேன்? அன்னவன் திருவடிக்கு அடிமையாக நீ அமர்வாயாக.

தாரகன் மரிக்க மலை சாய அசுரேசன்
பார உடல் பீற ஒரு பாழி அயில் ஏவும்
வீரன் அடி எண்ண வினை வெல்வது அரிதோ சம்
பூரண நினைப்பொடு அது போற்றிதி என் நெஞ்சே.       3

3. என் நெஞ்சே! தாரகாசுரன் மடியவும், கிரெளஞ்சமலை பிளக்கவும், அசுரர் அரசனான சூரனுடல் பிளக்கவும், ஒரு வலிய வேற்படையை ஏவின வீரனான குமரனின் திருவடியை நினைக்க வினையை வெல்வது அரிதாகுமோ? சம்பூர்ணனின் நினைப்பொடு அதனை வணங்குவாயாக!

வாக்கு மனம் மெய்வழி வளர்ந்த பவம் எல்லாம்
போக்க உள நீ உரை புதைக்கு இறுதி வந்து
நீக்கும் முனமே குருவை நேயமுடன் நேடு
நோக்கம் நிறை வேறும் மதி நுட்பம் இது நெஞ்சே.   4

4. நெஞ்சே! வாக்கு மனம் மெய் வழியாக வளர்கின்ற பாவங்கள் எல்லாம் போக்க, நீ வாழும் உடம்பிற்க முடிவு வந்து நீக்குவதற்கு முன்பு, குருவை அன்புடன் தேடுவாயாக! இதுவே உன் நோக்கம் நிறைவேறுதற்குரிய மதிநுட்பமாகும்!

புண்ணியம் இலா வறியர் புந்தி நிகர் கூந்தல்
பெண்நசை எனும் கழுது பின்தொடருமேல் சேய்
தண்ணளி எனும் பெரிய தண்டம் அது கொண்டு
மண்ணில் மடியும்படி வதைத்து இனிது உய் நெஞ்சே.  5

5. நெஞ்சே! புண்ணியம் இல்லாத வறுமையுடையவர் மனம் போல், இருண்ட கூந்தலுடைய மாதர் ஆசை என்னும் பேய் பின் தொடருமானால், சேயின் குளிர்ந்த அருள் எனும் பெரிய தண்டத்தைக் கொண்டு, நிலத்தில் இறந்து விழும்படி அந்தப் பேயை வதைத்து நீ பிழைப்பாயாக!

சந்தமும் ஆடு அரி தழங்கிட நடிக்கும்
செந்தில் நகர் மேவிய திருக்குமரவேள் தாள்
புந்தியில் நினைந்து தெளி போத அறிஞர்க்கு ஆல்
எந்திரமும் மந்திரமும் ஏன் உணர்வு நெஞ்சே.    6

6.அறிபுடைய நெஞ்சே! எப்போதும் வெற்றிச் சிலம்பு ஒலிக்க நடமிடும் திருச்செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள திருக்குமரவேளின் திருவடியை மனத்தில் நினைத்துத் தெளிகின்ற ஞானமுள்ள அறிஞர்க்கு இயந்திரமும் மந்திரமும் ஏன்? தேவை இல்லை என்றவாறு!

ஆதி இடை அந்தரம் இலாத அயில் ஈசன்
பாத இணை கொண்டு அருள் படைத்த நிபுணர்க்கு
மாதமொடு இராசி திதி வாரம் எழுநாள் கோள்
ஏதும் இலை என்று அறிவில் ஏறு உணர்வு நெஞ்சே.          7

7. அறிவுடைய நெஞ்சே! முதலும் நடுவும் முடிவும் இல்லாத வேலிறைவன் இரு திருவடிகளை வணங்கி அருள்பெற்ற நிபுணர்களுக்கு, மாதம், இராசி, திதி, வாரம், எழுநாள், கோள் என எவையும் இல்லை என்று அறிவில் உணர்த்துவாயாக!

சோதி இறைவற்கு இனிய தொல் பிரணவச் சால்
போதிய குகேசன் அடி உற்ற உறழ்வார்க்குச்
சாதி குலம் நாமம் நசை சஞ்சலம் விகற்பம்
ஏதும் இலை என்று அறிவில் ஏறு உணர்வு நெஞ்சே.          8

8. அறிவுடைய நெஞ்சே! சோதியாயுள்ள கடவுளான சிவபெருமானுக்கு இனிய பழைமையான பிரணவத்தின் மேன்மையை உபதேசம் செய்தருளிய குகேசன் திருவடியைச் சேர்ந்த அறிஞர்க்கு சாதி, குலம், பெயர், ஆசை, துன்பம், வேற்றுமை ஆகிய ஏதுமில்லை என்னும் அறிவில் நிலைப் பெறுவாயாக.

திக்கு ஒடு திகந்தமும் நிறைந்த சிவசேயோன்
நக்கன் ஒடு உரைத்த பொருள் நாடும் அறிவாளர்
துக்க சுகம் என்று அறை சுழிப்பவனம் உள்ளே
சிக்கி உழலார் அறிதி சிந்தனை கொள் நெஞ்சே.                   9

9.சிந்தனை செய்யும் நெஞ்சே! திசைகளுடன் திசைகளின் முடிவிலும் நிறைந்திருக்கும் சிவபெருமானின் புதல்வன், சிவபெருமானுக்கு உரைத்த பிரணவத்தின் பொருளை நாடும் அறிவாளர், துக்கம் சுகம் என்று கூறப்படும் சுழிக்காற்றினுள்ளே சிக்கி வருந்தமாட்டார் என்று அறிவாயாக!

அஞ்சொல் நயம் விஞ்சிய அருள் புகழ்கள் அந்நாள்
நெஞ்சு உருக ஒதினவன் நெஞ்சுழி இருந்தோன்
தஞ்சம் என நிற்குநர் தயங்குவர் கொல் என்றும்
சஞ்சலம் இல் அந்தநிலை தன்னை அடை நெஞ்சே.   10

10. அழகிய சொல் நயம் மிகுந்த திருப்புகழ்களை அந்நாளில் நெஞ்சுருகப் பாடியருளிய அருணகிரிநாதர், தம் மனத்துள்ளே இருந்தோன் தமக்கு அடைக்கலம் என்று இருப்போர் தயக்கம் கொள்வாரோ? எக்காலத்திலும் துன்பமில்லாத அந்த நிலையை நெஞ்சே நீ அடைவாயாக.